மூலிகைகள் ஒவ்வொன்றுக்கும் தனித் தன்மையான மருத்துவக் குணங்கள் உள்ளன. அவற்றில் கற்ப மூலிகைகள் என பல மூலிகைகள் உள்ளன. அதில் குப்பைமேனியும் ஒன்று. குப்பைமேனி பூண்டு இனத்தைச் சார்ந்தது. இவை தோட்டங்களிலும், சாலை ஓரங்களிலும் வளர்ந்திருப்பதைக் காணலாம்.
குப்பைமேனி மாற்று அடுக்கிலும் வட்ட அடுக்கிலுமாக அமைந்த, ஓரத்தில் பற்களுடன், பல அளவுகளில் உள்ள இலைகளை உடைய தாவரம். இலைக்காம்புகளின் இடுக்குகளில் அமைந்த பசுமையான, கொத்தான பூக்களைக் கொண்டது. இதற்கு அரி மஞ்சரி, பூனைவணங்கி, மேனி என்ற பல பெயர்கள் உண்டு குப்பைமேனி கசப்பு, காரச் சுவைகளும், வெப்பத் தன்மையும் கொண்டது. மார்புச்சளி, சுவாச காசம், சுபநோய்கள், கீல்வாதம் முதலியவைகளைப் போக்கும். குப்பைமேனி இலைத் தளிர்களை நீரில் கொதிக்கவைத்து குடிப்பதால் குடல் புழுக்கள் அழியும். .
தோல் நோய்கள் குணமாக குப்பைமேனி இலைச்சாற்றுடன் தேவையான அளவு மஞ்சள் தூள் சேர்த்துக் குழைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் பூசிவர வேண்டும் அல்லது குப்பைமேனி இலை, மஞ்சள், உப்பு சேர்த்து அரைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் பூசி, 3 மணி நேரம் ஊறவைத்து, கழுவி வரலாம்.
பெண்கள் குப்பைமேனி இலையை மஞ்சளுடன் சேர்த்து அரைத்து, முகத்தில் தடவி, சிறிது நேரம் வைத்திருந்து பின்னர் கழுவிவர, முகத்திலுள்ள பருக்கள், புள்ளிகள் மறைவதுடன் முகம் பளபளப்பாக மாறும்.
10 குப்பைமேனி இலைகளை நன்கு கழுவி சுத்தம் செய்து, பசும்பாலுடன் சேர்த்து அவித்து உண்டுவர, தேக அழகும், ஆரோக்கியமும் ஏற்படும். குப்பை மேனி இலையை மைய அரைத்து கடிவாயில் பத்து போட எலிக் கடியின் விஷம் குறையும்
ஒன்பது குப்பை மேனி இலையுடன் 6 மிளகை அரைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு பின் பசும்பாலைக் குடிக்கவும். இதனை மூன்று நாட்கள் செய்து உப்பில்லா பத்தியம் இருக்க யானைக்கால் சுரம் குணமாகும்.
கும்பைமேனி இலைச் சாற்றை காய்ச்சிய பாலில் கலந்து குடித்து வர சுவாசக் கோளாறுகள் குணமாகும். இதன் இலையுடன் மஞ்சள் சேர்த்து சிரங்குகள் மீது தடவி வர விரைவில் சிரங்கு அகன்றுவிடும். தேள், பூரான், வண்டுக்கடி வீக்கத்தின் மீது இலையை அரைத்துப் பூசிவர விஷம் முறியும்.